Friday, February 29, 2008

420. இன்று எழுத்தாளர் சுஜாதா வீட்டில்

ஒரு 2 வருடமாக, தேசிகனின் உதவியோடு அவரை நேரில் சந்திக்க எண்ணியபோதெல்லாம், ஏதாவது ஒரு காரணத்தால், சந்திப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.  இப்போது அவரே போய் விட்டார் :( 

இன்று காலை சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி செலுத்த அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன்.  பல பிரபலங்கள் வந்திருந்தாலும், சூழல் எந்த வித ஆரவாரமும் இன்றி அமைதியாக சாதாரணமாகவே இருந்தது.  கண்ணாடிப் பெட்டியில் இருந்தவர் உறங்குவது போலத் தான் தோன்றியது.  அருகில் இருந்த தேசிகன் சோகத்தில் இருண்டு போய் காணப்பட்டார்.  கடந்த பல வருடங்களாக சுஜாதா தேசிகனை தனது சொந்த மகன் போலத் தான் பாவித்து வந்ததை நான் அறிவேன்.  தேசிகனும் சுஜாதா மேல் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்ததோடு, தேவையான சமயங்களில் அவர் கூட இருந்து பல உதவிகள் செய்திருப்பதும் எனக்குத் தெரியும். சுஜாதாவுக்கு மிகவும் நெருக்கமானவரான மனுஷ்யபுத்திரனும் சோகமே வடிவாக காட்சியளித்தார். அவரிடமும்,  தேசிகனிடமும் என் இரங்கலைத் தெரிவித்தேன் !

நான் அங்கு செல்வதற்கு சற்று முன்பு தான் கலைஞரும், கமலும் தங்களது இறுதி மரியாதையை செலுத்தி விட்டு சென்றிருந்தனர்.  மதனையும், இயக்குனர் வசந்த்தையும், கனிமொழியையும் (சுஜாதாவுக்கு மிக நெருக்கமானவரும் கூட) பார்த்தேன். நான் பார்த்தவரை, பாலு மகேந்திரா, சுஹாசினி, மணிரத்னம், பிரமிட் நடராஜன், சிவகுமார், அவரது மகன் கார்த்திக், பாலகுமாரன், அனுராதா ரமணன், சாரு நிவேதிதா, வைகோ, திருமாவளவன் என்று பல பிரபலங்கள் இரங்கல் தெரிவிக்க வந்தனர். வந்தவர்களை வைத்துப் பார்த்தால், தமிழ் எழுத்தாளராக, சுஜாதா ஏதோ சாதித்து இருப்பார் போலத் தான் தெரிகிறது !!!  பதிவர்களில் ரஜினி ராம்கி, டோண்டு, அதியமான், உண்மைத்தமிழன், இரா.முருகன், ஹரன் பிரசன்னா என்று சிலரை சந்திக்க முடிந்தது. 

எனக்கும் சுஜாதாவுக்குமான உறவு, எழுத்தாளர்-வாசகன் என்பதோடு முடிந்து விடுகிறது.  அவர் எழுத்துக்களோடு மட்டுமே எனக்கு பரிச்சியம் உண்டு. அவர் எழுதியதில் ஒரு 90% வாசித்திருப்பேன்.  என்னவோ, அவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை (சிறுகதை, நாவல், நாடகம், சயின்ஸ் பிக்ஷன், அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்தவை, கட்டுரைகள்) வேறு யாரும் ஏற்படுத்தவில்லை, அவர் 'இலக்கியம்' என்று பெரிய அளவில் எதுவும் படைத்திராவிட்டாலும்!  அவர் படைப்புகளில் பலவற்றை
இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன்.

ஒரே ஒரு முறை அவரை நேரில் பார்த்திருக்கிறேன், 24 வருடங்களுக்கு முன்.  நான் கோயமுத்தூர் GCTயில் பொறியியல் மாணவனாக இருந்த காலகட்டத்தில், எங்கள் மின்னணுவியல் அசோசியேஷன் அழைப்பின் பேரில் வந்திருந்தார்.  அன்றைய கல்லூரி தின விழாவில் extempore-ஆக ஒரு 30 நிமிடங்கள், ஆங்கிலக் கலப்பின்றி அவர் தமிழில் உரையாற்றியதை மறக்கவே முடியாது !!!  அது போலவே, ஒரே ஒரு முறை (2 மாதங்களுக்கு முன்) அவருடன் அம்பலம் சாட்டில் உரையாடியிருக்கிறேன் ! சாட்டுக்குள் சற்று தாமதமாக நுழைந்தும்,  தேசிகனின் நெருங்கிய நண்பர் என்று அறிமுகம் செய்து கொண்டதால், சாட்டை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் ஒரு பத்து மணித்துளிகள் நீட்டிக்க முடிந்தது.  நரேந்திர மோடி, கிரிக்கெட், வலைப்பதிவுகள் என்று சில விஷயங்கள் பற்றிய கேள்விகளுக்கு, அவரது பாணியில் பதில் கூறினார்.

அவரது 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' கதைத் தொகுப்பு ஒரு மாஸ்டர் பீஸ் என்பதில் சந்தேகமில்லை.  அக்கதைகளில் காணப்படும் அவரது தேர்ந்த (அவருக்கு மட்டுமே வசப்படும்) நடையும், மெலிதாக இழையோடும் நகைச்சுவையும், சில இடங்களில் உருக்கும் சோகமும், நாஸ்டால்ஜியாவைத் தூண்டி நம்மை அசை போட வைக்கும் உத்தியும், அவரது எழுத்து ஆளுமையை பறைசாற்றுபவை!  அவரது தூண்டில்
கதைகளில் காணப்படும், ஜெஃப்ரி ஆர்ச்சரின் A twist in the tale வகை துள்ளல் நடையும், இறுதியில் வரும் எதிர்பார்க்க முடியாத சடார் முடிவும் வாசிப்பவரை கட்டிப் போட்டு விடும்.  கணேஷ் வசந்த் பங்கு பெறும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைகளில், துப்பு துலக்க அவர்கள் இருவரும் உரையாடும் கட்டங்களையும், மேற்கொள்ளும் சாகசங்களையும் சுஜாதாவின் நுண்ணிய அறிவியல் சார் சிந்தனை ஓட்டத்தின்
வெளிப்பாடாக நோக்கலாம்.  'நிர்வாண நகரம்' நாவலில் வரும் (புத்தி கூர்மை மிக்க) நாயகனாகவே நான் சுஜாதாவைப் பார்க்கிறேன் ! 

அவருக்கு இரங்கல்/அஞ்சலி தெரிவிக்கும் வகையில் தமிழ் வலைப்பதிவுலகில் வெளி வந்த நாற்பதுக்கும் மேற்பட்ட இடுகைகள் சுஜாதா ஏற்படுத்திய வாசக தாக்கத்துக்கு சான்று!  அவற்றில் குறிப்பிடத்தக்கவை கனடா வெங்கட், பிரகாஷ், அருள்செல்வன் கந்தசுவாமி, பெனாத்தல் சுரேஷ், காசி, டோ ண்டு, விக்கி (இன்னும் சில பெயர்கள் நினைவுக்கு சட்டென்று வர மறுக்கிறது!) எழுதியவை.  ஒரு விஷயம் உறுத்தலாக இருக்கிறது.  பொதுவாக, ஒருவர் இருக்கும்போதே அவரைப் பாராட்டி நாம் எழுதுவதே இல்லை என்று கூறலாம், விமர்சனம் என்ற பெயரில் குறைகளை மட்டுமே எழுதுகிறோமோ என்று தோன்றுகிறது :(

வாசகர்கள் வாழ
ஸ்ரீரங்கத்து தேவதைகள் வாழ
கணேஷ் வசந்த் மதுமிதா வாழ
ஆத்மா ஜினோ அனிதா வாழ
நீர் 'கற்றதும் பெற்றதும்' வாழ

நீர் ஏனய்யா நூறாண்டு வாழாமல் சென்று விட்டீர் ?

சுஜாதா சார், "பிரிவோம் சந்திப்போம்" !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று.

Thursday, February 28, 2008

A COLOSSUS by the name of SUJATHA!

மீள் பதிவு (posted on 3 MAY 2005)
********************************
இந்த வார விகடனில், சுஜாதா அவர்களின் "கற்றதும் பெற்றதும்" மிக மிக உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட ஒன்று. வயதானால் ஏற்படும் உடல்/மன/குண மாற்றங்களை தனது அசத்தலான பாணியில் நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். அவர் உடலுக்கு தான் வயதே ஒழிய மனம் இன்னும் இளமையாக இருப்பதாகவே தோன்றுகிறது.


அதற்கு உதாரணம், அவரைப் போன்ற இன்னொரு தாத்தாவின் வயதை கண்டுபிடிக்க அவர் மேற்கொள்ளும் சாகசம் :-) (பார்க்க, தேசிகனின் ஹாப்பி பர்த்டே சுஜாதா
!
)


//எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
//


யதார்த்தத்தை எவ்வளவு நெகிழ்ச்சியாக வெளிப்படுத்தியிருக்கிறார்! எனக்கென்னவோ, அவர் பல ஆண்டுகளாக, அயற்சியில்லாமல் தனது உடலையும், மூளையையும் வருத்திக் கொண்டதன் விளைவாகவே (அதனால் பலருக்கு அவரது எழுத்துக்கள் வாயிலாக மிகுந்த சந்தோஷம் கிடைத்தது என்றாலும்) தற்போது பலவித உடல் நலக்குறைவுகளால் கஷ்டப்படுகிறார் என்று தோன்றுகிறது. அவர் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்.


//கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது.
//

NOSTALGIA போன்ற ஒரு சுகமான உணர்வு உலகத்தில் கிடையாது என்று பறைசாற்றுபவை அவரது ஸ்ரீரங்கத்துக் கதைகள்.

ஸ்ரீரங்கத்து கதைகளை (முழுத்தொகுப்பாக) மறுபடியும் படித்தபோது ழரு பிரமிப்பு லற்பட்டது! ஒவ்வொரு கதையும் ஒரு நல்முத்து! அவற்றை படிக்கையில், திரு.R.K.நாராயணன் அவர்களின் "Malgudi Days" ஏற்படுத்திய அதே அளவு தாக்கத்தையும், ஒரு வித சுகமான "Nostalgic" உணர்வுகளையும் அனுபவிக்க முடிந்தது. அந்தக்காலத்து மிக அழகான ஸ்ரீரங்கத்தையும், மக்களையும், பெருமாளையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவற்றை படித்து முடிக்கும் வரை, அவரது தேர்ந்த, unique "கதை சொல்லும் பாணி" என்ற கயிற்றினால் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார்!!

குறிப்பாக, "அரசு பகுத்தறிவுப் பாசறை" ஓரு "Real Classic"! Jeffrey Archer-இன் பாணியை திரு.சுஜாதா மிக அருமையாக தமிழில் கையாண்டிருக்கிறார். எவரும் எதிர்பார்க்காத ஓரு முடிவு தான் அக்கதையின் சிறப்பு! அடுத்ததாக, "மாஞ்சு" என்ற கதை, உள்ளத்தை உருக்கி விடுகிறது. "மறு" என்ற கதையில் வரும் நிகழ்ச்சிகளை உண்மையில் நடந்ததாகத் தான் நினைக்கத் தோன்றுகிறது!!


//சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!".
//

எங்கேயோ படித்திருக்கிறேன். ஒரு பெரிய தத்துவ மேதை (நாத்திகர்) இறக்கும் தருவாயில், தனது சீடர்களை அழைத்து, "நான் இத்தனை நாள் கடவுள் இல்லை என்று சொல்லி வந்ததை மட்டும் கொள்ளாமல், நீங்கள் உங்கள் வழியில் அது உண்மையா என்று ஆராய வேண்டும்" என்றாராம். சுஜாதா சொல்லும் குழப்பங்கள் பலருக்கும் உள்ளன.


// நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).
//

எவ்வளவு எளிமையாகக் கூறி விட்டார்!


//இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.
//


அவர் கூறிய இந்த TOP TEN-இல் குறைந்தது 9 விடயங்கள் பொதுவாக எல்லா வயதினருக்கும் பொருந்தக் கூடியவையே!!! இளவயதினருக்கு பத்தாவது விஷயமாக 'பணத்தை'க் கூறலாம்!


//என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ரோஜா வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், அரவிந்த சாமியுடன் என்னை மண முடி! என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், பாலம் கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!
//

இதை வாசிக்கும்போது, அவரது சிறந்த கதைகளில் ஒன்றாக நான் கருதும் "பிரிவோம் சந்திப்போம்" பகுதி இரண்டின் கடைசி பத்தி (நியூயார்க் நகரை அற்புதமாக வர்ணித்து விட்டு, ஆனால் மதுமிதா தான் இல்லை என்று நாயகன் நினைப்பதாக முடித்திருப்பார்!) ஏற்படுத்திய அதே தாக்கம் உண்டானது!!!! அந்த தாக்கத்தின் (பல ஆண்டுகளுக்கு பின்னர்!) வெளிப்பாடு தான், என் மகளுக்கு "மதுமிதா" என்று பெயர் சூட்டியது!!!


அவரே ஒரு கட்டுரையில் எழுதியது போல 'இன்னுமொரு நூற்றாண்டிரும்' என்று அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா


நன்றி: ஆனந்த விகடன்

419. சாதனையாளர் எழுத்தாளர் சுஜாதா மறைவு

கடந்த சில நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுஜாதா அவர்கள், நேற்றிரவு 9 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 72. அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்..

அவரை ஒரு முறை சந்திக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே போய் விட்டதில் எனக்கு பெரிய வருத்தம். இத்தனைக்கும் தேசிகன் எனது நெருங்கிய நண்பர். ஏதாவது ஒரு காரணத்தால் அவரை சந்திப்பது தட்டிப் போய்க் கொண்டே இருந்தது. இப்போது அவரே போய் விட்டார் :(

தேசிகனிடம் பேசினேன். மிக்க சோகத்தில் இருக்கிறார் என்பது குரலிலேயே தெரிந்தது. கடந்த 2 நாட்களாக நினைவு இன்றி தான் சுஜாதா இருந்ததாக அவர் கூறினார். சுஜாதாவுக்கு, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என்று அனைத்திலும் பிரச்சினைகள் !

அவரது 70-வது பிறந்தநாளின் போது "இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்று வைணவ பாரம்பரியத்தின்படி வாழ்த்தி நான் எழுதிய பதிவு இங்கே

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, February 12, 2008

418. பெங்களூரை சீரழிக்கும் தகவல் தொழில்நுட்பம்!

உலக அரங்கில் பெயர் பெற்ற, திடநிலை மற்றும் பொருள் வேதியியல் விஞ்ஞானியும் (solid state and materials chemist), பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவரும் ஆன C.N.R. ராவ் பெங்களூரின் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சாடி  அவுட்லுக் இதழில் கூறியுள்ள கருத்துகளை (இயன்றவரை) மொழி பெயர்த்து தந்துள்ளேன்:

எளிமையையும் மகிழ்ச்சியையும் ஒரு சேர அனுமதித்த பெருமைக்குரிய பெங்களூர் இப்போது இல்லை! ஒரு காலத்தில், வித்யார்த்தி பவனில் ஒரு மசால் தோசையும், காபியும் உங்களைச் சந்தோஷமாக வைத்திருந்தது.  தற்போதுள்ள பெங்களூர் பெருமளவு சீரழிந்து காணப்படுகிறது.

தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சிக்கு முன், பெங்களூரில் கவிதையும், இசையும் வாழ்ந்தன. சமீப காலங்களில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பெங்களூரில் பிரதானமாக இருப்பவை அழுகலும், மாசுச்சூழலும், குப்பையும் மட்டுமே!  இக்குப்பையில், தகவல் தொழில் நுட்பத்தின் அறிவுஜீவிக் குப்பையும் அடக்கம்!

பெங்களூர், வெகு காலமாகவே, அறிவார்ந்த நகரமாகவே இருந்து வந்துள்ளது. இந்த நகரத்தை 'கார்டன் சிட்டி' என்று அழைத்தாலும், இந்தியாவின் பல நகரங்களைக் காட்டிலும், அறிவியலில் பெருமைக்குரிய இடத்தை பெங்களூர் பெற்றிருந்தது.  இப்போது அது குறித்து யாரும் பேசுவதில்லை. பெங்களூரை தகவல் தொழில்நுட்ப நகர் என்றே அழைக்கின்றனர்!  தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் ஆரம்ப காலத்தில், வேலை வாய்ப்புகள் பெருகியதை வைத்து, இது நல்லது என்றே நானும் கருதினேன்!

இத்தனை வருடங்களில், தகவல் தொழில்நுட்பம் என்பது 'மால்'களில் புழங்கும் ஓர் உயர்மத்திய வகுப்பின் ஜனத்தொகையை பெருக்கியுள்ளது.  இதில் தவறு ஒன்றும் இல்லை என்றாலும், இதனால் பெங்களூரின் உண்மையான அறிவுஜீவித்தனத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு சிந்திக்கத் தக்கது. 

கெட்டிக்கார மாணவர்கள் 20 வயது ஆவதற்கு முன்னமே, IT குறித்து சிந்திக்கத் தொடங்குவது, அதனால் சுலபமாக பணம் ஈட்ட முடியும் என்பதால் மட்டுமே!  இதனால், பல அறிவாளிகள் தங்கள் அறிவுத் திறத்திற்குக் கீழான பணியை மேற்கொள்கிறார்கள்.  அவர்களும் கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளிகளைப் போன்றவர்கள் தான்!

இத்தகைய சூழல் இந்தியாவுக்கு ஏற்றதா ? அனைத்துத் துறைகளிலும் - திறமையான கவிஞர்கள், நல்ல பொருளாதார நிபுணர்கள், வரலாறு வல்லுனர்கள், சிறந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என்று - தேவையான அளவில் திறமை மிக்கவர்கள் இருத்தல் அவசியம்.  தகவல் தொழில்நுட்பத்தில் செழிக்கும் இந்தியாவில், கணினிவியலில் வருடத்திற்கு 25 பேரே டாக்டர் பட்டம் பெறுவது பெரிய முரண் இல்லையா?

தகவல் தொழில்நுட்பத் துறை முதலாளிகள் ஆரம்பத்திலேயே தங்கள் பணி மையங்களை ராமநகரம் (பெங்களூரிலிருந்து 40 கிமீ) போன்ற டவுன்களில் திட்டமிட்டு இருக்க வேண்டும், தகவல் தொழில்நுட்ப சாட்டிலைட் நகரங்களை உருவாக்கியிருக்க வேண்டும்.  அதை விடுத்து, அவர்கள் அனைவரும் பெங்களூருக்கு உள்ளேயே நிலத்தை வளைத்துப் போடவே விரும்பினர்!  அது போலவே, அவர்களுக்கு நிலம் கிட்டியும், அது போதவில்லை என்று புகார் வேறு கூறுகின்றனர்!

சாலைகள் சரியில்லை என்று ஒரு புகார், ஆனால் எதற்காக அவர்களுக்கு வேண்டி இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று புரியவைல்லை,  அவர்களது சமூகப் பொறுப்பை அவர்கள் சரியாக நிறைவேற்றாதபோது !  இவ்வளவு பணம் பண்ணும் இந்த IT முதலாளிகள், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் அல்லது ஹார்வர்ட் போன்ற ஒரு தனியார் பல்கலைக்கழகத்தை உருவாக்கியிருந்திருந்தால், அவர்களால் ஏற்பட்ட மற்ற பிரச்சினைகளுக்கு ஈடு செய்வது போல அமைந்திருக்கும்!

IT துறையில் பணி புரிபவர்கள் கொழிப்பதால், எனக்கு என்ன பயன், நானும் விப்ரோ அல்லது இன்போசிஸ் போன்ற நிறுவனத்தில் வேலை செய்யாத பட்சத்தில் ?  நாம் (மக்கள்) அவர்களுக்கு நிறைய கொடுத்திருக்கிறோம், பதிலுக்கு எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை என்பதே யதார்த்தம் !

நமது சமூகம் உருவாக்கியிருக்கும் (IT துறையைச் சார்ந்த) ரோல் மாடல்களும், முன்மாதிரிகளும், பெங்களூரின் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல், நமது வாழ்வியல் மதீப்பீடுகளையும் (values) சேர்த்தே சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் !!!!!  நம் மக்கள், உழைப்புடன் கூடிய மேதமைக்கு (scholarship) மரியாதை தந்த காலம் போய்விட்டது.  பணமும், வணிகமும் நம்மை ஆக்ரமித்து விட்டன.

தகவல் தொழில்நுட்பத்தால் நமது அடிப்படை மதிப்பீடுகளுக்கு ஆபத்து தொடருமானால், பெங்களூரையும் எரிக்க வேண்டும், தகவல் தொழில்நுட்பத்தையும் எரிக்க வேண்டும் !!!

நன்றி: அவுட்லுக்

பி.கு: நான் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி புரிந்தாலும், CNR ராவ் அவர்கள் கூறியுள்ள பெரும்பாலான கருத்துக்களோடு எனக்கு ஒப்புதலே என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன் !

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails